Monday, April 23, 2007

சிறிலங்கா கூட்டுப் படைத் தளம் மீது வான்புலிகள் அதிரடித் தாக்குதல்: ஆயுதக் கிடங்கு அழிப்பு-

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை திகைப்பூட்டும் வகையில் தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டது. 6 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன. பலாலி வான்படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து இயங்கும் யாழ். சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது துணிகரமாக குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திய தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன. இதில் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் உள்ள ஆயுதக்களஞ்சியம் மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு சென்றிருந்த சிறிலங்கா படைத்தளபதிகள் ஆகியோருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காப் படைகளின் கட்டளை மையமாக உள்ள பலாலித்தளத்திற்குள் குண்டுகளை தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளமையானது சிறிலங்காப் படைத்துறையினருக்கும், அரசாங்கத்துக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளத்திற்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்த நிலையில் என்ன தாக்குதல் நடக்கின்றது என்று தெரியாத அளவுக்கு பலாலி படைத்துறை மையம் திகைப்படைந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட போது பலாலிப் படைத்தள மையத்தில் பெரும் குண்டுவெடிப்பு ஒலிகள் கேட்டதனையும், தீப்பிழம்புகள் எழுந்துள்ளதனையும் நேரில் பார்த்த சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தமிழீழ வான்படையினரின் தாக்குதல் நடத்தப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தின் மின் வழங்கல் உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன், பலாலி மையத்தில் இருந்து இருந்து இயங்கும் செல்லிடப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாவது: பலாலி வான்படைத்தளம் மற்றும் இராணுவக் களஞ்சியம் ஆகியவற்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக எமது தளத்துக்குத் திரும்பியுள்ளனர். இதில் சிறிலங்கா இராணுவத்துக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த வானூர்தியில் இருந்த எமது வானோடி ஒருவரை தொடர்பு கொண்டபோது பலாலித் தளம் தீப்பற்றி எரிந்தததை தாம் பார்த்ததாகக் கூறினார். இத்தாக்குதல் தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பான ஊடக மையத்தின் பேச்சாளர் கூறியதாவது: எமது இராணுவத்தினர் இலகு ரக வானூர்தி ஒன்றைப் பார்த்துள்ளனர். அது பருத்தித்துறையிலிருந்து பலாலி நோக்கி வந்துள்ளது. எமது படையினர் 50 கலிபர் துப்பாக்கிகள் மூலம் அந்த வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்திய போதும், அவர்கள் இராணுவ பதுங்கு குழிகள் மீது 2 குண்டுகளை வீசிச் சென்றனர். இத்தாக்குதலில் 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்றார். சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தனது இணையத் தளத்தில் பதிவு செய்துள்ள செய்தி: பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்தி உள்நுழைய முயன்றது. அதனை இராணுவத்தினர் முறியடித்தனர். பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்து அந்த வானூர்திகள், பலாலிக்கு வந்தன. பாதுகாப்பு எச்சரிக்கை சாதனங்கள் உடனே இயக்கப்பட்டன. தாக்குதல் வானூர்திகளை நோக்கி வானூர்தி எதிர்ப்பு தளபாடங்கள் நிறுத்தப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தாக்குதல் ஏதும் நடத்தாமல் தாக்குதல் வானூர்தி திரும்பியுள்ளது. இருப்பினும் திரும்பிச் செல்லுகையில் மயிலிட்டி கடற்பரப்பில் வெடிபொருட்களை வீசிச் சென்றுள்ளனர். இதனிடையே பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது பலாலி படைத்துறையின் தலைமையக மையத்தில் ஆயுதக்களஞ்சியம், முதன்மை இராணுவ மருத்துவமனை, கவசப்படைப்பிரிவு மையம், உள்ளிட்டவையும் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானுர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா வான்படையினரின் வான் பொறியியல் பிரிவு ஒன்றும் இங்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பலாலி வானூர்தி நிலையம் வான் வழியான சிறிலங்கா படைத்துறையின் முதன்மை வழங்கல் மையமாகவும் இருந்து வருகின்றது. படைத்துறையினர் காயமடையும் போது அவர்களை மேலதிக சிகிச்சைக்காக பலாலியிலிருந்தே வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழமையாகும். கடந்த மாதம் 26 ஆம் நாள் தமிழீழ வான்படையினர் சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் வான்புலிகளின் தளங்கள், வான்புலிகளின் இலக்குகள், விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக் கூறிக் கொண்டு 150-க்கும் அதிகமான தடவைகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர். தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலின் மூலம் மீண்டும் தமது வலிமையை நிரூபித்துள்ளனர். கடந்த 1994 ஆம் ஆண்டு பலாலி படைத்தளம் ஓடுபாதைக்குள் கரும்புலிகள் அணி ஒன்று ஊடுருவி தாக்குதல் நடத்தி உலங்குவானூர்தி ஒன்றை அழித்திருந்தனர். இதன் பின்னர் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வானூர்தி ஓடுபாதையை சேதமாக்கியிருந்தனர். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காப் படையினர் நடத்திய வலிந்த தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையின் போது, பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு போக்குவரத்து உலங்குவானூர்தியும் சேதமடைந்திருந்தன. தமிழீழ வான்படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை மற்றும் பலாலி வான்படையினரின் ராடார்களின் இயக்கத்துக்கு மத்தியில் வெற்றிகரமாக சென்று அடர்ந்த இருள்வேளையில் இன்று குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருக்கின்றனர். தமிழீழ வான்படையினரின் இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காப் படையினர், தமது முன்னரங்க நிலைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிக் கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். http://www.eelampage.com/?cn=31525

No comments: