Tuesday, June 28, 2005

என் காதல் தோல்வியில் அவன் காதல் வெற்றி!

திருமண அழைப்பிதழை மேசையில் வைத்துவிட்டு, போயிட்டு வாறேன்டி சிவா காத்திருப்பான் என்று சொல்லிவிட்டு பறப்பாய் பறந்தாள் சித்திரா. அவளை வழி அனுப்ப ஒரு வார்த்தை கூட பேசாது மெளனமாய் இருந்தேன். இரண்டு மாதமாய் என்னோடு இந்த மெளனம், இப்படியே ஒரு வித தனிமை குடிகொண்டது காரணம் எனக்கு மட்டும் தெரிந்த உண்மை. என்னோடு, என்மனதோடு காதலனாய், காவலனாய் வாழ்ந்த சிவா சித்திராவை காதலிக்கிறான் என்ற செய்தி எனக்குள் இருந்த துடிப்பு, சுறுசுறுப்பு எல்லாத்தையும் பறிச்சுக்கொண்டு போன மாதிரி ஒரு உணர்வு. அவன் எனக்கு என்று எண்ணிய நான் ஏனோ அவனுக்கு நான் தானா என்று பார்க்க மறந்துவிட்டேன். என்ர ஒரே ஒரு சிநேகிதி சித்திரா அவளிற்கு கூட தெரியாமல் எல்லோ அவன் எனக்குள் வாழ்ந்தவன். இரண்டு மாசத்திற்கு முதல் அவன் சித்திராவிற்கு தன் காதலைத்தெரிவிக்கும் படி என்னிடமே வந்து தூது சொன்னான் என்ர உயிரை யாரோ பறிச்ச மாதிரி தெரிஞ்சுது. சிரித்து சிரித்து கலா கலா என்று பேசுவானே. நீ வா போ என்று என்னோடு தடையின்றி பேசுவான், இந்த உரிமையை நான் யாருக்கும் இருவரை கொடுத்ததில்லையே. சித்திராவைவிட என்னோடு தான் அவன் அதிகம் பேசுவான். சித்திராவை கூட வாங்கோ, போங்கோ என்று அந்நியமாய் கூப்பிடுவானே. என்னோடு தான் அத்தனை நெருக்கம். அதனால் தான் அவன் எனக்குள் வந்தான். ஆனால் ஆனால் சித்திராவிற்காய் தான் அவன் என்னோடு நெருக்கமானான் என்பதை, அவன் காதலிற்கு தூது செல்லச்சொன்ன போது தான் நான் தெரிந்து கொண்டேன். சித்திரா கூட அவன்ர காதலை மறுக்கவில்லை அவன் சொன்னவுடன் எதிர்பார்த்திருந்தவள் போல சம்மதம் சொல்லிவிட்டாள். ஒரு வேளை இது தான் உண்மைக்காதலா தெரியவில்லை சிவாவின் உணர்வு சித்திராவிற்கு இருந்தது. ஏன் என்ர உணர்வு சிவாவிற்கு வரவில்லை காரணம் தெரியவில்லை, அதற்காய் அவன் உணராததால் என் காதல் பொய்யென்று எப்படிச்சொல்ல முடியும். கொப்பி கொப்பியாய் 2 வருசம் அவனுக்காய் கவிதை என்ற பெயரில நான் எழுதியவற்றையும், அவன்ர பெயரையும் தேடித்தேடி அழிச்சனே என்ர மனம் அப்ப என்னை அறியாமல் அழுதிச்சே இதெல்லாம் பொய்யா? என் நண்பிக்காய் இவற்றை அழிக்க தான் என்னால் முடிந்தது மனசில எப்பவும் அவன் இருப்பான் என்று தான் நினைக்கிறன். ஒரு வேளை இதை யாருக்கும் முதலில சொல்லியிருந்தால் சிவாவை நான் இழந்திருக்க மாட்டேனோ என்று நினைக்கிறன். அவன் என்னை காதலிக்காட்டால் என்ன நான் காதலிச்சது அவனை அந்த நின்மதி போதும் எனக்கு. ஆனால் அவனும் சுயநலக்காரணா இதுவரை எப்படிப்பழகினவன். இப்ப நலம் கூட விசாரிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா இல்லை அவன் தவிர்க்கிறானா தெரியவில்லை. இப்ப கூட சித்திராவின் கலியாணத்திற்குரிய வேலைகளை செய்யத்தான் சித்திராவீட்டை வந்தன். ஆனா ஆனா இது சிவாவின் கலியாணமும் கூட. அவர்கள் காதல் வென்றிச்சா? என் காதல் தோத்ததா? காதலின் வெற்றி என்றால் என்ன கலியாணத்தில் முடிவதா? அப்படி என்றால் நான் தோர்த்தவள் தானே? தேற்றது என் நண்பியிடம் என்ற நினைவில் அவனது திருமண வேலையில் இறங்குகிறேன்.

Tuesday, March 29, 2005

சிறீலங்கா மீது ஐ.நா.வில் புகார்

சர்வதேச ஆழிப்பேரலை நிவாரணங்களை தமிழர்களுக்கு அளிக்காததும் மனித உரிமை மீறலே: சிறீலங்கா மீது ஐ.நா.வில் புகார் இலங்கைத் தீவகத்தில் தமிழர் தாயகப் பகுதியில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆழிப்பேரலையால் தமிழர் தாயகப் பாதிப்பு விவரங்கள் குறித்தும் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடம் தமிழர் உரிமை மையம் முறையீட்டு மனுவை அளித்துள்ளது. ஜெனிவாவில் கடந்த மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 61 ஆவது கூட்டத் தொடரின் தலைவரான இந்தோனேசிய நாட்டின் ஐ.நா தூதுவர் திரு. மக்கரிம் விப்பிசோனிடம் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயளார் ச. வி. கிருபாகரன் இந்த முறையீட்டு மனுவை அளித்தார். பிரான்சில் தலைமையகத்தைக் கொண்டு தமிழர் மனித உரிமைகள் மையம் இயங்கி வருகிறது. ஐ.நா. மனித உரிமைக் குழுவிடம் தமிழர் மனித உரிமைகள் மையம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று வருடங்களாகியும் இன்னும் அங்கு எந்தவித சுமுகமான நிலையும் உருவாகவில்லை. போர்நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டது போல் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியவில்லை. இராணுவம் தொடர்ந்தும் மக்களை துன்புறுத்துவதுடன், பாதுகாப்பு வலயம் என்று கூறி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மக்கள் குடியிருப்புக்கள் அடங்கிய பல பெரிய பிரதேசங்கள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் போர்க்காலத்தில் இருந்த இராணுவத்தினரை விட பல மடங்கு இராணுவத்தினர் தற்பொழுது உள்ளார்கள். கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் இராணுவத்தின் உதவியுடன் அவர்களுடன் சேர்ந்தியங்கும் கூலிப்படைகளினால் அரசியல் படுகொலைகள் தொடர்கின்றன. அண்மையில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மக்களின் வாழ்க்கையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஆழிப்பேரலை துயரங்கள் ஓர் மனித உரிமை மீறல் சம்பவம் இல்லாவிடிலும், சிறீலங்கா அரசு இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித மனிதாபிமான உதவியும் செய்யாத காரணத்தால் இது ஒரு மனித உரிமை மீறலாக மாறியுள்ளது. தொடர்ந்து சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்பட்ட எந்தவித நிவாரணங்களோஇ நிதி உதவிகளோ வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை கிடைக்கப்பெறவில்லை. இலங்கைத்தீவில் ஆழிப்பேரலையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கு கிழக்கில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களேயாகும். இம் மாவட்டங்களில் உடனடி மீட்பு வேலைகளை தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் இணைந்து செய்தனர். இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் வேறு சில அரசசார்பற்ற நிறுவனங்களினாலுமே நிவாரணங்கள் கொடுக்கப்படுகிறது. சிறிலங்கா அரசு உண்மைக்குப்புறம்பான தகவல்களுடன் சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் அவர்கள் ஆழிப்பேரலை பாதிப்புக்களை நேரில் பார்வையிட சிறீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த பொழுது சிறீலங்கா அரசு கோபி அனானை வடக்கு கிழக்கிற்கு செல்லவிடாது தடுத்து நிறுத்தியிருந்தது. சிறீலங்கா அரசின் இச் செயற்பாடு ஐ.நா சபையின் அதிகாரப்பத்திரத்தின் சாரம் 100ஐ மீறிச் செயற்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரிய விடயம். கோபி அனானைத் தொடர்ந்து சிறிலங்கா வந்த பல நாட்டுத் தலைவர்களையும் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவிடாது சிறீலங்கா அரசு தடுத்து நிறுத்தியுள்ளது, ஓர் மனிதாபிமானமற்ற செயலாகும். இதேவேளை சிறீலங்கா அரசு பெரும்தொகையான பணத்தைச் செலவழித்து ஆயுதங்களை கொள்வனவு செய்து போருக்குத் தன்னை தயார் செய்கிறது. இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் மீதான அனுதாபம் சர்வதேச சமூகத்திற்கு இருந்தபோதும், அதை வெளிப்படையாக காட்டத் தயங்குவது மிகவும் கவலை தரும் விடயம். இதனாலேயே சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகிறார்கள். இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தொடரினால், இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் ஏனைய மக்களைப்போல் சமனாக நடத்தப்படவேண்டும் என்று ஓர் கண்டனம் கொண்டுவருமாறு உங்களைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, சர்வதேச சமூகத்திடம் நிவாரண உதவிகளை வடக்கு கிழக்கு மக்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்க வேண்டிக்கொள்ளுமாறும் வேண்டுகிறோம். இத்துடன் அறிக்கைகளும், அட்டவணைகளும், ஒப்பீடுகளும் உங்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி: புதினம் www.puthinam.com

Monday, March 28, 2005

மீண்டும் பாரிய சுனாமி அபாயம் எழுந்துள்ளது

சுமாத்ரா கடற்பரப்பில் எழுந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தையடுத்துää இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சிறீலங்கா கடற்பரப்பில் மீண்டும் பாரிய சுனாமி தாக்கம் ஏற்படலாம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 8.1 றிக்ரர் அளவில் எழுந்ததாக நம்பப்படும் நிலநடுக்கத்தையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துää இந்தியா கடற்பரப்புகளில் தற்போது கடற்கொந்தளிப்பு எழுந்துள்ளதாகவும்ää இன்னும் ஓரிரு மணிகளில் இலங்கை கடற்பரப்பை இந்த ஆழிப்பேரலைகள் தாக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதற்கிடையில் தற்போது இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படிää வடக்கு கிழக்கில்ää விடுதலைப் புலிகள்ää பாரிய ஒலிபெருக்கிகள் மூலம் மக்களை எழுந்து கடலுக்கு அப்பால் செல்லுமாறு அவசர அறிவித்தல்கள் விடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. www.puthinam.com

Sunday, March 27, 2005

சிறீலங்கா மீது அனைத்துலக உரிமை அமைப்புக்கள் கண்டனம்!

ஜெனீவா ஐநா கூட்டத்தொடர்: சிறீலங்கா மீது அனைத்துலக உரிமை அமைப்புக்கள் கண்டனம்! ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழவின் 61வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் அமைந்துள்ள ஐநா பணிமனையில் இடம்பெற்றுவருகின்றது. அனைத்துலக மனிதஉரிமைகள் சட்டங்கள்ää நெறிமுறைகள் என்பனவற்றின் அடிப்படையில் இடம்பெறும் இக் கூட்டத்தொடரின் ஆரம்பநாட்களில் சுமார் 90 நாடுகளின் உயர்மட்ட அரச அமைச்சர்கள் மற்றும் வெளிவிவகாரத்துறை செயலாளர்நாயகங்கள் உரையாற்றினார்கள். சிறீலங்கா வெளிவிவகாரஅமைச்சர் கதிர்காமர் மூன்றாவதுநாள் தனது நாட்டின் மனித உரிமைகள் பற்றிய உரையை வழங்கினார். அவ்வுரையில் தமது நாட்டில் சுனாமி நிவாரணங்கள் திறம்பட நடப்பதாகவும், சிவில் உரிமைகள் திறம்படப் பாதுகாக்கப்படுவதாகவும், அவசரகாலநிலை நீங்கிவிட்டதாகவும் கூறினார்.இக்கூட்டத் தொடர்களில் பிரதானமாக சீனா, அமெரிக்கா, கியூபா, நேபாளம், ஈரான், இந்தியா, பாக்கிஸ்தான் என்பன அரச மட்டங்களில் தமக்குள் மோதிக்கொள்கின்றன. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்துலக அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் செச்சினியா, காஸ்மீர், ஆச்சே மற்றும் தமிழீழ விடயங்கள் பற்றிய கவனஈர்ப்புக்களை கோரி உரையாற்றினார்கள். அத்துடன் பெண்கள், சிறுவர்கள் மீதான உரிமைமறுப்பு விடயங்கள், பொருண்மிய கலாச்சார சமூக உரிமை மறுப்பு விடயங்கள், அரசியல் சிவில் உரிமை மறுப்புக்கள் என்பன போன்ற தலைப்புக்களில் விவாதங்கள், அறிக்கைகள் என்பன தொடர்ந்து வருகின்றன.இந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஐநாவை மறுசீரமைப்பது தொடர்பான செயலாளர் நாயகத்தின் புதிய கடுமையான பிரேரணைகள் மத்தியில் இடம்பெறுகின்றமையால் விறுவிறுப்பானதாகவே அமைகின்றது. அவரது புதிய திட்டத்தில் தற்போது இடம்பெறும் வடிவிலான கூட்டத்தொடர் மாற்றப்பட்டு பொதுச்சபை வடிவில் மனிதஉரிமைகள் விடயங்கள் ஆராயப்படும். இதன் மூலம் கியூபா, ஈரான், சீனா போன்ற நாடுகளின் செல்வாக்கு மனித உரிமைகள் விவாதங்களின் போது செல்லுபடியற்றதாகிவிடும். ஏனெனில் தற்போதுள்ள ஆணைக்குழு வடிவில் அமெரிக்கா அரசியல் நோக்கில் முன்வைக்கும் மனிதஉரிமைகள் கரிசனைகள் விரிவான கடுமையான விமர்சனங்களுக்குட்படுகின்றது, எதிர்வரும் 7ம் திகதி செயலாளர் நாயகம் கொபி அனான் இங்கு உரையாற்றுவதாக தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளமையால் இந்த மறுசீரமைப்பு விவகாரம் கடுமையாக சு10டுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வடக்குகிழக்கு மனித உரிமைகள் ஆணைக்குழவின் உபதலைவர் சட்டத்தரணி சிவபாலன் உயர்மட்டக்குழு உறுப்பினர் மாகாசிவம் ஆகியோர் அரசசார்பற்ற அனைத்துலக அமைப்புக்களின் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். அத்துடன் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பின் 6 பிரதிகளும்ää தமிழர் மனித உரிமைகள் மையத்தின் இரு உறுப்பினர்களும் கலந்துகொள்கின்றனர்.இவ்வாணைக்குழவின் முன் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு, மனித உரிமைகள் மையம் என்பன சார்பில் இருவேறு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு, ஆணைக்குழு நிகழ்வுகளின் 9வது அட்டவணையின் கீழ் சமர்ப்பித்துள்ள மனுவில் இன்றைய வடக்குக்கிழக்கு நிலவரம் தொடர்பான விடயங்களை தொகுத்து சமர்ப்பித்துள்ளது. இதுவரை நோர்வே மத்தியத்துவத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முயற்சிகளின் தோல்வகளை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்துப் பிரிந்து செல்லும் தகைமைப் பெற்றுள்ளனர் என்கின்ற அனைத்துலக பிரகடனத்தின் அடிப்படையில் இம்மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாணைக்குழு முன் உரையாற்றிய கதிர்காமர் சுனாமி நிவாரணங்கள் தொடர்பாக வெளியிட்ட பிழையான கருத்துக்களை மறுத்து பதிலளிக்கும் குறிப்பொன்றையும் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு வெளியிட்டு பிரதிநிதிகளின் சுற்றுக்கு அனுப்பியது. அதேவேளையில் அவசரகால நிலவரம் தொடர்பாக கதிர்காமர் தெரிவித்த பொய்களை அம்பலப்படுத்தி nஐனீவா கூட்டத்தொடரில் பங்கேற்கும் வடக்குக்கிழக்கு மனிதஉரிமைகள் பணிமனையின் உபதலைவர் சட்டத்தரணி சிவபாலன் வெளியிட்ட கருத்துக்கள் பத்திரிகை செய்திக்குறிப்புக்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டது. இவ்வாணைக்குழு முன் உரையாற்றிய இத்தாலியை தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக உரிமைகள் மற்றும் விடுதலைக்கான அமைப்பின் செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் காலகட்டத்தை நோக்கி தள்ளப்படுகின்றார்கள் என்பதை மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டி உரையாற்றினார். சனநாயக சட்டத்தரணிகள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட டியற்றி மக்னோல்ட் இன்றைய சிறீலங்கா நிலவரம் தொடர்பான நிலவர உரையை ஆற்றினார். இங்கு உரையாற்றிய அனைத்து இனப்புறக்கணிப்புக்கும்ää இனவாதத்திற்கும் எதிரான யப்பானிய அமைப்பின் சிறப்புப்பிரதிநிதிää சுனாமி நிவாரணங்களில் தமிழ் முஸ்லீம் மக்கள் புறக்கணிப்புகளுக்கு உட்பட்டது தொடர்பான கண்டனத்தை வெளியிட்டார். தெற்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களிற்கான புதிய வீடுகளுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டு விட்டன ஆனால் வடக்கிலும்ää கிழக்கிலும் தொடர்ந்தும் மக்கள் கூடாரங்களில் நம்பிக்கையற்று வாழ்வதாக அவர் நிலைமை விபரித்தார். இதேவேளையில் ஐநாவின் காணமற்போனவர்களுக்கான சிறப்பு பணிக்குழு ஆணைக்குழவிற்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில் இலங்கையில் சிறீலங்காப் படைகளால் பிடிக்கப்பட்டு காணமல் போன 12227 பேரின் நிலவரம் தொடர்பான தமது விசாரணைகள் தொடர்வதாக அறிவித்துள்ளது. அத்துடன் தம்மால் 1991ää 1992ää 1999 ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பு திருத்தங்கள்ää பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல் போன்ற விடயங்களில் சிறீலங்கா செயற்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது. அத்துடன் காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிநிதிகளில் பாகுபாடு காட்டடப்படக் கூடாது எனவும் கோரியுள்ளது. இவ்வாண்டு சனவரிவரை ஐநாவின் சிறப்புப் பணிக்குழவின் தகவல்களின் பிரகாரம்ää 12227 காணமல் போனவர்களின் விபரங்களை ஐநா சிறீலங்கா அரசிடம் கோரியிருந்தது. அவற்றில் அரசு 5338 நபர்களின் விபரங்களை ஐநாவிற்கு சமர்ப்பித்திருந்தது. இதில் 5254 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்ää 24 பேர் படையினரின் கைகளில் உள்ளனர். 99பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதிவிபரங்களை அரசு ஐநாவிற்கு இன்னமும் வழங்கவில்லை. இவற்றில் செம்மணியில் கொல்லப்பட்ட தமிழர்களும் அடங்குவர். இன்றும் உலகில் காணமல் போனவர்களின் நிலுவை கூடுதாலகக் கொண்ட முன்னணி நாடாக சிறீலங்காவேயுள்ளது. தொடர்ந்தும் கூட்டத்தொடர் ஏப்பிரல் இரண்டாம் வாரம்வரை இடம்பெறுகின்றது. தகவல் [www.sooriyan.com]

Wednesday, March 23, 2005

தாலியினால் ஒரு பந்தம்..! (சிறுகதை)

நடக்கிறதுகளைப்பார்க்க எரிச்சல் எரிச்சலாய் இருந்தது கவிதாவிற்கு இரண்டாவது முறையாக மீண்டும் மணமேடையில் மணப்பெண்ணாய்.அதே ஐயர், அதே மண்டபம், நெருப்பு, அதே மந்திரம், ஆனால் இம்முறை மாப்பிள்ளை மட்டும் மாற்றம். "என்ன இது இவர்கள் இப்படி எத்தனை நாளைக்கு தான் இந்த மந்திரம் தந்திரம் என்று ஏமாற்றப்போகிறார்கள்" தனக்குள் நொந்து கொண்டாள். இத்தனை மந்திரங்களையும் அன்றொருநாள் ஒன்றும் விடாமல் ஒப்பித்தவள் தானே கவிதா.எத்தனை எதிர்பார்ப்புக்களுடன் கணவனுடன் அப்படி பழகவேணும், இப்படி சிரிக்க வேணும் என்று எத்தனை நாள் நினைத்தது நினைத்து கற்பனை பண்ணி இதே மணமேடையில் தாலியையும் ஏந்திக்கொண்டவள். இவர்களது மந்திரம் வாழ்த்துக்கள் நெருப்பு எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை மணமகளாய் இருந்து பெறுவாள் என்று எதிர்பார்த்தாளா.? எரிச்சலை அடக்கிக்கொண்டு ஐயர் சொன்ன மந்திரங்களை எல்லாம் ஒன்றும் விடாமல் ஒப்பித்தாள் வேண்டாவெறுப்பாய்.அவளது முகத்தில் இருந்த எரிச்சலை புரிந்து கொண்ட வசி கேட்டான். "ஏன் கவிதா என்ன சூடாய் இருக்கிறீங்க?". "ஒன்டும் இல்லை வசி, தயவுசெய்து சும்மா இருங்கோ பிறகு கவலைப்படப்போறீங்க" இரகசியமாய் சொன்னாள். மணப்பெண்ணல்லவா? மணமகனுடன் மணமேடையில் அதிகம் கதைத்தால் சிரிப்பார்கள் அதிலும் இவள் இரண்டாவது தடவை மணமகள். "எனக்கு தெரியும் கவிதா நீங்க என்ன நினைச்சீங்க என்று, சரி வேண்டாம் விடும்". என்று அவனே தவிர்த்துக்கொண்டான்.இன்று வசியைக் கவிதா இரண்டாவதாக மணம் முடிக்கிறாள். இரண்டு வருடங்கிளிற்கு முன்னர் இதே மேடையில் இத்தனை சுற்றமும் சூழ வசியின் அண்ணா சசிகரனை மணம் முடிச்சு திருமண பந்தத்தில் நுழைந்தவள். ஒரு பாதி நாளும் அந்த பந்தத்தை அனுபவிக்க முடியாதாவளாய் போய்விட்டாள். கலியாணம் முடிந்த முதல் இரவு கணவன் என்ன கேட்பான் எப்படி பதில் சொல்ல என்று ஆவலாய் அறையில் நுழைந்தவளுக்கு இடி பின்னால் வந்தது. வெட்கத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முகம் கண்ணாடியில் தெரிந்தது. கண்ணாடியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் சசி பேச்சு எதுவுமே இல்லை. அருகில் இருந்த அந்த கண்ணாடியில் கவிதாவின் உருவம் தெரிந்தது. கணவன் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான் என்று எண்ணி வெட்கத்துடன் தலை குனிந்தாள் கவிதா.தீடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத்திறந்தாள். சசியின் தாய் தண்ணீரும் மாத்திரையுமாய் வந்தாள். "இல்லைப்பிள்ளை குளிசை போட மறந்திட்டான் அது தான் கொண்டுவந்தனான்" என்றாள். என்ன குளிசை? ஏன்? எதற்கு? எத்தனையோ கேள்விகளைக்கேட்க நினைத்தவள் அடக்கி கொண்டு "என்னட்ட தாங்கோ அத்தை நான் கொடுக்கிறன்" என்று வாங்கியவள். "என்னத்திக்கு அத்தை இவ்வளவு குளிசை பாவம் சசி என்றாள்". "என்ன செய்யிறது அவனின்ர விதி பிள்ளை யார் என்ன செய்ய முடியும்" என்று விட்டு நகர்ந்தாள் சசியின் தாய். குளிசைகளிற்கிடையில் நித்திரைக்குளிசைகள் இரண்டு முழித்துக்கொண்டிருந்தன. என்ன இது என்று புரியாதவளாய் அவனிடம் மாத்திரைகளை நீட்டினாள். வாங்கி அதை விழுங்கியவன் அப்படியே சிறிது நேரத்தின் பின் தூங்கிவிட்டான். அவளிற்கு எப்படித்தூக்கம் வரும் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை அவளுடன்.இல்லற வாழ்வில் இணைய காத்திருக்கும் இரு சோடிகளில் ஒன்றிற்கு இப்படியா நித்திரைக்குளிசை கொடுப்பார்கள். கோவித்த படி மெல்ல கதவை திறந்து வெளியில் வந்தவளிற்கு எதிரில் தென்பட்டவள் சசியின் தாய் தான். அவளிடம் விசாரித்ததில் தான் தெரிந்தது அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது. இந்த விடயம் கவிதாவின் பெற்றோருக்கும் தெரியும் என்பது கவிதாவிற்கு பேரிடியாக விழுந்தது.சிறுவயதில் வெளிநாட்டிற்கு பிழைப்பிற்காய் அனுப்பப்பட்டவன் தான் சசி. சிறுவயதில் அவனிற்கு வேண்டிய அன்பு பாசம் அரவணைப்பு எல்லாத்தையும் இழந்தவன். அதை ஏங்கி ஏங்கி தவித்து தனியாக வாழ்ந்தவன் இன்று இந்த நிலையிற்கு வந்துவிட்டான். பார்க்காத வைத்தியர்கள் இல்லை வெளிநாட்டிலும் சரி இலங்கையிலும் சரி எல்லாரும் அன்பும் பாசமும் தான் அவனிற்கு முக்கியம் என்று கூறிவிட்டார்கள். உடனேயே அவன் தாய் தந்தையாரிடம் வந்துவிட்டான். இலங்கை வந்தபின்னும் பல வைத்தியர்களிடம் காட்டினார்கள். எந்த பிரயோசனமும் இல்லை என்பது தான் பதில். தனிமையையே நாடிய சசி திடீரென சத்தம் போடுவதும், கத்துவதும் என்று எல்லாரையும் பயப்பிடித்தினான். அப்பொழுது தான் சசிக்கு ஒரு திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.இவர்களது காலம் கவிதாவிற்கும் அப்பொழுது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தரகர் ஒருவர் மூலம் இருகுடும்பத்திற்கும் இடையே இணைப்பு ஏற்பட்டது. சசியின் தாய் எல்லாவிடயங்களையும் கவிதாவின் பெற்றோருக்கு கூறியிருந்தார். மிகவும் வசதியான குடும்பம், அது மட்டும் அவர்களது கண்களிற்கு தெரிந்தது. கவிதா நல்ல பொறுமைசாலி அவளால் நிச்சயமாக சசியைக்குணப்படுத்த முடியும் என்று முடிவெடுத்தார்கள். இருந்தும் இதுபற்றி கவிதாவிடம் எதுவும் அவர்கள் பேசவில்லை. பெற்றோர்கள் தனக்கு தீங்கைச்செய்யப்போவதில்லை என்ற முழுநம்பிக்கையில் கவிதா மேலதிகமாய் எந்த ஆராச்சியிலும் ஈடுபடவில்லை. திருமணத்திற்கும் சம்மதித்தாள். அது தான் அவள் செய்த ஓரே ஒரு தவறாய் இருக்கலாம். இன்று தான் இந்த விடயம் எல்லாம் அவளிற்கு தெரிந்தது. இத்தனையும் அறிந்த பின் என்ன செய்வது என்று ஏதும் அறியாமல் நின்றாள். பெற்றோரே இப்படி செய்வார்கள் என்று எந்த பெண்ணாவது எண்ணுவாளா.? அதுவே அவளிற்கு இடியாய் விழுந்தது. உண்மையை முதலில் சொல்லியிருந்தால் ஒரு வேளை இதன் தாக்கம் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது எல்லாரும் சேர்ந்து ஏமாற்றிய ஒரு உணர்வு. எங்கையாவது போய்விட வேண்டும் என்று தான் தோன்றியது. ஆனால் சசியின் நிலையையும் அவனது குடும்பத்தையும் பார்க்கையில் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்ற எண்ணம் தான் தோன்றியது. எது நடந்தாலும் இனி இப்படியே வாழ்வது என்று முடிவுடன் போய் அமர்ந்து கொண்டாள். எப்படி மனதை தேற்றிக்கொண்டாலும் சசியை கணவன் என்பதைவிட அவன் ஒரு மனநோயாளி என்பது தான் அவளிற்கு தெரிந்தது.முதல் இரவு என்பது தாம்பத்தியத்தில் மறக்க முடியாத இரவு என்பார்கள். அவளிற்கும் அதே போல் தான் ஆனால் இந்த இரவு வந்திருக்க வேண்டாம் என்பது தான் அவளது எண்ணம். அன்றைய இரவு அவளது தூக்கம் சோபாவினுள் அடங்கியது. நீண்ட நேரம் விழித்திருந்தாள் எழுந்திருக்க நேரம் ஆகிவிட்டது. காலை ஆறுமணி இருக்கும் ஒரு அழைப்பு "கவிதா எழும்பி போய் கட்டிலில் படுக்கலாமே". புதிய குரல் தன்னை உசார் படுத்திக்கொண்டு விழித்துப்பார்த்தாள் அது சசி. "இல்லைப்பறவாய் இல்லை" என்றவள் எழுந்தாள். "I am very sorry" என்று அவன் அவளைப்பார்த்து சொன்னான். அவன் ஏன் அப்படிச்சொன்னான் என்பதற்கு காரணம் அவள் தேடவில்லை. அவன் நல்ல மனநிலையில் இருக்கும் போது பேசுகின்ற ஒரு சில வார்த்தைகள் இவை.இப்படித்தான் அவர்களது வாழ்க்கை ஆறு மாதங்களாய் ஓடியது என்று தான் சொல்லவேண்டும். சசியின் அழைப்பில் விழித்துக்கொண்டவள். எழுந்தவுடன் விறுவிறு என்று வெளிக்கிட்டு எங்கேயோ அவசரமாய் சென்றாள். "என்ன அண்ணி அவசரமாய் கிளம்பீட்டீங்க வீட்டையோ!? எதிர்ப்பட்டவன் வசி. "ம் ஒருக்கா போயிட்டு வாறன்" என்று ஒரே சொல்லில் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். வீட்டிற்கு சென்றவள் அவர்கள் இரவு சொன்னது எல்லாம் பொய்யாய் இருக்கக்கூடாதா என்று எண்ணியபடி வீட்டினுள் நுழைந்தாள். இத்தனை வெள்ளென மகளைக்கண்ட பெற்றோருக்கு நெஞ்சு பதை பதைத்தது. "என்னம்மா என்ன நடந்தது" என்று பதற்றத்துடன் விசாரித்தார் தகப்பன். "அப்பா சசிக்கு பயித்தியம் என்று உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, ஏன் எனக்கு சொல்லலை" . கேள்விகளை கணையாய் தொடுத்தாள். "என்னம்மா இப்படிகேக்கிறாய் சசிக்கு ஒன்றும் பயித்தியம் இல்லை ஒரு சிறிய மனக்குழப்பம் அவ்வளவும் தான்" என்று தாய் கூறிய போது கவிதாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. "அப்ப உங்களிற்கு அந்தவிடயம் தெரியும் ஏன் எனக்கு சொல்லேல்லை. என்னை எப்படியாவது தொலைச்சுப்போடவேணும் என்று நினைச்சியள். செய்து முடிச்சிட்டியள் அப்படித்தானே?". என்று கேட்டவளிற்கு பதில். அவள் கார் பங்களா வேலைக்காறி என்று சந்தோசமாய் இருக்க வேணும் என்று நினைத்தார்களாம். அப்படி ஒரு வாழ்வு இத்தனை நாளும் அவளிற்கு கிடைக்கவில்லை இனியாவது சந்தோசமாய் வாழட்டும் என்று தான் செய்தார்களாம் இது அவர்கள் பதில். நெஞ்சே வெடித்து போய்விடும் போல் இருந்தது கவிதாவிற்கு. என்ன இவர்கள் பெற்றவர்கள் மாதிரியா பேசுறார்கள். வசதியும் பணமும் இருந்தால் போதுமா.? சந்தோசம் வேண்டாமா.? பல கேள்விகளைக்கேட்டவள் இனி செய்வதற்கு ஏதும் இல்லை. விதி வழி வாழ்க்கை போகட்டும் என்று நினைத்துவிட்டு. "சரியம்மா காரையும் பங்களாவையும் கட்டிக்கொண்டு நான் வாழுறன். இனி உங்களிற்கு ஒரு மகள் இருந்தாள் என்றதை மறந்திடுங்க. எனக்கு ஒரு தலைவலி என்றால் பணம் ஓடிவந்து மருந்து தரட்டும். அந்தப்பணம் மட்டும் எனக்கு போதும் என்னைப்பாக்கிறதிற்காய் இனி அங்கினை வரதேங்கோ. இன்றையோட முடிஞ்சிது எனக்கு இந்த வீட்டு உறவு. பணத்திற்காய் ஆசைப்பட்டு என் தங்கைகள் வாழ்க்கையயையும் இப்படி ஆக்கிப்போடாதேங்கோ அவர்கள் ஆவது நல்லாய் இருக்கட்டும்" என்று கண்ணீரால் கதையை சொல்லிவிட்டுச்சென்றாள்.இப்படியே தான் ஆறு மாதங்கள் காலம் போனது. எப்படி அவளால் கணவனையோ அவனது குடும்பத்தையோ தண்டிக்க முடியும்? அவர்கள் என்ன செய்தார் என்ற எண்ணத்தோடு இப்படியே காலத்தை கழிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டால் கலியாணம் முடிந்து ஒரு சில வாரங்களில் அவள் மீண்டும் வேலைக்கு போக தொடங்கிவிட்டாள். யாருடன் தனது கதையைச்சொல்லி அழுவது யாரையும் அவளிற்கு பிடிக்கவில்லை. பெற்றவர்களே இப்படி ஏமாற்றும் போது வேறு யார் உண்மையாக இருப்பார்கள் என்ற எண்ணம் தான். வேலை முடிந்தால் வீடு வீட்டில் எந்த நேரமும் கையில் புத்தகம். ரமணிச்சந்திரனின் கதைகள் யாவையும் கரைத்துக்குடித்து விட்டாள் என்று தான் சொல்லவேண்டும். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வேற்று மனிதர்கள் போல் தான் அவளிற்கு. ஏதோ கடமைக்கு பழகுவது போன்று. வாழ்க்கை ஒரு பிடிப்பில்லாமலே போய்விட்டது. கணவனுக்கு அவளும் முடிந்தளவு முயற்சி செய்து விட்டாள். வைத்தியரிடமும் பல முறை காட்டினாள்.அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டார்கள் என்று பலர் பேசினார்கள். சசி என்ன நேரம் எப்படியிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவனிற்குள் நெருடல். ஒரு பெண்ணின் வாழ்வு தன்னால் அழிந்து விட்ட குற்ற உணர்வு. இதுவே அவனது கதையை முடித்தது. அந்த உணர்வினாலேயே ஓரு நாள் தற்கொலைக்கு சென்று விட்டான். இதுவரை ஏதோ ஒரு உறவு அவளை அங்கு வைத்திருந்தது. நேயாளியாய் எனினும் கணவன் இருந்தான். அந்த உறவும் முறிந்து போனது. சசிக்கும் கவிதாவிற்கும் இடையில் இருந்த உறவு எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். தாமரையிலையில் தண்ணியைப்போலத்தான் அவர்கள் எட்டி நடந்தார்கள். கணவன் இறந்த ஒரு சில மாதங்களின் பின் கவிதா அங்கிருந்து வெளியேறிவிட்டாள். வீட்டில் எல்லோருடைய சம்மதத்துடன் தான். அவர்களும் எப்படி மறிப்பார்கள்.? தாலி ஏற்படுத்திய உறவால் அங்கிருந்தாள். அந்த தாலியே இல்லை என்றானபின் அவள் விலகிக்கொண்டாள். இருந்தாலும் அவளினுள் உறுத்தல் தன்னால் ஒரு உயிர் பறிபோய்விட்டதாய் வருத்தம், அங்கிருக்கும் நிமிடங்கள். என் அண்ணணை என் பிள்ளையை கொன்றுவிட்டாயே பாவி என்று கேட்பது போல் ஒரு உணர்வு.அவள் வெளியேறிவிட்டாள். வேலை செய்யும் இடத்திற்கருகில் ஒரு பெண்கள் விடுதியில் சரனடைந்து கொண்டாள். தாய்வீட்டிற்கு செல்ல அவளிற்கு மனசு இடம் கொடுக்கவில்லை வாவென்று அழைக்க முடியாதவர்களாய் அவர்களும் வரச்சொல்லி வற்புறுத்தினார்கள். வெட்டி விட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதில் அவளிற்கு விருப்பமில்லை. விதவை என்ற சொல்லைத்தவிர அவளிற்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. வெறுமை வெறுப்பு யாவும் சூழ்ந்த நிலை பழகிப்போய்விட்டது.சசியின் குடும்பத்திலிருந்து அடிக்கடி ஒருரிருவர் வந்து அவளைப்பார்த்துச்செல்லவது வழக்கம். அவளும் அதைத்தடைசெய்வில்லை. இப்படித்தான் ஒரு நாள் வசி வந்தான். " கவிதா உங்களுடன் கொஞ்சம் பேசவேணும்" என்றான். சசிக்கும் கவிதாவிற்கும் பெரிய வயசுவித்தியாசம் இல்லை கவிதா அவனைவிட ஒரிரு வயது குறைந்தவள் தான். "என்ன வசி சொல்லுங்கோ" என்றாள். அவன் ஒரு சிறு துண்டை அவளிடம் நீட்டினான். "கவிதா இதை அண்ணா சாகமுதல் எழுதி என் அறையில் வைத்திருக்கிறார். எனக்கு என்ன செய்யிறதென்று என்று தெரியயேல்லை. அம்மா அப்பாவுக்கும் காட்டினனான் அவர்களும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதைப்பாத்திட்டு உங்கள் முடிவைச்சொல்லுங்கோ எதுவானாலும் எனக்கு பிரச்சனையில்லை. நீங்கள் எங்கட வீட்டை எப்படி வாழ்ந்தீங்கள் என்று எனக்கு நல்லாய் தெரியும். உங்கள் முடிவு தான் வேணும். உங்கட வீட்டில யாரிட்டையும் நாங்கள் பேசேல்ல ஏற்கனவே பிரச்சனை தானே" என்று கூறினான். "சரி கவிதா நான் போயிட்டு வாறன். ஆறுதலாய் யோசியுங்கோ பிறகு ஒரு பதில் சொல்லுங்கோ இது உங்கட வாழ்க்கை" என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.என்னவென்று புரியவில்லை கவிதா புரியாதவளாய் அந்த காகிதத்தை பிரித்தாள். அது சசியின் கையெழுத்து பொதிந்த ஒரு கடிதம்.வசிக்கு எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் சாரம் இது தான். கவிதா அவன் தாலிகட்டிய மனைவி. அதைவிட அவளிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு பாவமும் அறியாத பெண்ணின் வாழ்வை தன்னால் அழிந்து விடக்கூடாது என்பதற்காய் சகலதும் அறிந்த தம்பி வசி. அவளைப்புரிந்து மீண்டும் மணந்து கொள்ள வேண்டும் எனபதே. அதுவும் அவன் விரும்பினால் மட்டும் என்று குறிப்படிட்டிருந்தான்.தன்னை அழித்து தன் மனைவிக்கு வாழ்வழிக்க எண்ணியிருந்தான் அவன். இதை சசியின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டார்கள். சசியின் பெற்றோரும் வந்து அவளுடன் கதைத்தார்கள். அவளது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் என்றால் இன்னொரு மணம் புரிவது தான். அவள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அறியாத ஒருவனை திருமணம் செய்வதை விட வசியை மணம் முடிப்பதால் ஏற்படும் புரிந்துணர்வை எடுத்துக்கூறினார்கள். அவளிற்கும் அது சரி என்றே தோன்றியது.ஒரு சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவளிற்கு மறுமணம் இன்று நடக்கிறது. அவள் மீண்டும் மருமகளாய் வசியின் மனைவியாய். இன்று ஆகப்போகிறாள். குனிந்த தலையுடன் கவிதாவின் பெற்றோரும் மீண்டும் ஒரு முறை அறுகரிசிபோட்டு வாழ்த்தினார்கள். அவள் எதிர்பார்த்த வாழ்க்கை ஒரு உயிரின் மறைவின் பின் கிடைத்ததில் அவளிற்கு வருத்தம். இருந்தும் அவனின் தியாகத்தில் அவள் வாழ்வு ஆரம்பமாகப்போகிறது. அவள் மீண்டும் வாழுப்போகும் வீட்டில் உள்ள மனிதர்களை எண்ணி நெகிழ்ந்து கொண்டு தன் பெற்றோர்களை ஏதோ வேண்டா வெறுப்பாய் பார்த்தாள். அவளைப்பொறுத்தவைர அவர்கள் செய்தது இன்னும் துரோகமே...!